Tuesday 16 October 2012

பல்லாங்குழி...

 பல்லாங்குழி...



பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடு்ம்+குழி =
பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி
விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது
ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும்.
இது மிக அரிதாகவே ஆடப்படுகிறது.


இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு,
வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப் படும். இதில்
பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று
பிரித்துக் கொண்டு எதிர்எதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள்
ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங் கொட்டைகள்) இட்டு
நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள
காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு
பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக்
குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்
கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின்
அடுத்தவர் ஆடத் தொடங்குவார். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர்
ஆடிக் கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் ஒருவருக்கே
சொந்தமாகிவிட்டால் ஆட்டம் முடிவுற்றதாகக் கருதப்படும். அனுபவமும்
சிந்திக்கும் திறனும் எண்களின் கணிப்பும் இவ்விளையாட்டில்
வெற்றியைத் தேடித் தரும்.இது இரண்டு அல்லது மூன்றுபேர் விளையாடும் விளையாட்டு. உழவர் பெண்கள் தரையில் குழிகளை அமைத்து விளையாடிய செய்தி காணப்படுகிறது. மரப்பலகைகளில் குழிகளை ஏற்படுத்திப் பல்லாங்குழியாகப் பயன்படுத்தியுள்ளனர். வெண்கலத்திலான பல்லாங்குழிகளும் காணப்படுகின்றன. கற்கள், புளியமுத்துகள், சோழிகள் ஆடுகருவிகளாகப் பயன்படுகின்றன.

பசுப்பாண்டி, எதிர்ப்பாண்டி, இராஜாப்பாண்டி, காசிப்பாண்டி, கட்டும்பாண்டி, சீதைப்பாண்டி, சரிப்பாண்டி என்ற வகைகளில் விளையாடப்படுகின்றன.
பாவணர் குறிப்பு:
1. பண்ணாங்குழி

I. பொதுவகை

ஆட்டின் பெயர் : நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு பண்ணாங்குழி எனப்படும். பண்ணையென்பது பள்ளம். பண்ணை பறித்தல் குழிதோண்டுதல்.
பண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி என வெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழிவைத்து இவ் விளையாட்டு ஆடப்பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங்காமையானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெருவழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங்குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள் கொள்ளப்படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம். ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர்.
ஆடுகருவி : நிலத்திற் சமமான இருபடுக்கை வரிசையாகக் கில்லப்பட்ட 10 அல்லது 14 அல்லது 16 குழிகளும், அவற்றுள் அவ்வைந்தாய் இடுவதற்கு வேண்டிய கழற்சிக்காய் (கச்சக்காய்) அல்லது புளியங்கொட்டை அல்லது கூழாங்கற்களும், இதற்கு வேண்டுங் கருவிகளாம்.
சிலர், என்றும் எங்கும் வசதியாய் ஆடுதற்பொருட்டு, வேண்டிய அளவு பள்ளஞ் செதுக்கப்பெற்ற மரக்கட்டைகளை வைத்திருப்பர்.
ஆடிடம் : இது வீட்டுள்ளும் வீட்டு அல்லது மரநிழலிலும் ஆடப்பெறும். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.
ஆடுமுறை : குழி வரிசைக்கொருவராக இருவர் வரிசை யடுத்து எதிரெதிர் உட்கார்ந்து, குழிக்கைந்தாக எல்லாக் குழிகளிலும் கற்களைப் போடுவர். முந்தியாடுபவர், தம் வரிசையில் ஏதேனுமொரு குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, வலப்புறமாகச் சுற்றிக் குழிக்கொன்றாகப் போட்டுக்கொண்டே போதல் வேண்டும். கற்களைப் போட்டு முடிந்தபின், கடைசிக்கல் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களைந்தையும் எடுத்து, அதற்கப்பாலுள்ள குழியில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டு போதல்வேண்டும். இங்ஙனம் போடும்போது, தம் வரிசையில் இடவலமாகவும், எதிரி வரிசையில் வல இடமாகவும் போட்டுச் செல்லவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி, வெறுமையாக இருந்தால் அதற்கடுத்த குழியிலுள்ள கற்களனைத்தையும் எடுத்துத் தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், எதிரியார் தம் வரிசையிலுள்ள ஒரு குழியிலிருந்து தொடங்கி, முன் சொன்னவாறே ஆடுவர். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழியிலும் கல் இல்லாவிடின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுவிட வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வரிசையிலுள்ள குழியொன்றில் 4 கற்கள் சேர்ந்துவிடின், அவற்றைப் பசு என்று சொல்லி எடுத்துக்கொள்வர். சிலவிடங்களில், 8 கல் சேர்ந்துவிடின் அவற்றைப் பழம் என்று சொல்லி எடுத்துக்கொள்வர்.இங்ஙனம் இருவரும் மாறி மாறி ஆடிவரும்போது, எடுத்துக் கொள்ளப்படாது எஞ்சியுள்ள கற்களெல்லாம் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்துவிடின், ஆட்டம் நின்றுவிடும். இருவரும் தாந்தாம் எடுத்துவைத்திருக்கும் கற்களை எண்ணுவர். கடைசியில் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்த கற்களெல்லாம், அவ் வரிசையாரைச் சேரும். மிகுதியான கற்களை எடுத்தவர் வென்றவராவர்.
சிலவிடங்களில், ஒரே ஆட்டையில் வெற்றியைத் தீர்மானியாமல், ஐந்தாட்டையின் பின் அல்லது பத்தாட்டையின் பின் தீர்மானிப்பர். அம்முறைப்படி ஆடும்போது, முன் ஆட்டைகளில் தோற்றவர் வென்றவரிடம் தமக்கு வேண்டிய கற்களைக் கடன் வாங்கிக் கொள்வர். வென்றவர் கடன் கொடாவிடின், இருக்கின்ற கற்களை அவ்வைந்தாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத அல்லது ஐந்து கல் இல்லாத குழிகளை வெறுமையாக விட்டுவிடவேண்டும். அவ் வெறும் குழிகட்குப் 'பவ்வீக் குழிகள்' என்று பெயர். அவற்றில் ஒவ்வொரு குச்சு இடப்படும். ஒருவரும் அவற்றில் ஆடல் கூடாது.
தோற்றவர்க்கு ஒருகுழியும் நிரம்பாதபோது (அதாவது ஐந்து கற்கும் குறைவாக இருக்கும்போது) இருக்கின்ற கற்களை ஒவ்வொன்றாகக் குழிகளிற் போட்டுவிட்டு, கல் இல்லாத குழிகளைப் பவ்வீக் குழிகளாக விட்டுவிடல் வேண்டும். அன்று எதிரியாரும் தம் வரிசையிலுள்ள எல்லாக் குழிகட்கும் ஒவ்வொரு கல்லே போடவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு கல்லே போட்டு ஆடும் முறைக்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். அவ்வைந்து கல் போட்டு ஆடித் தோற்றவர், கஞ்சிகாய்ச்சி ஆடும்போது வெல்ல இடமுண்டு. ஒரு முறை வென்றவர் மறுமுறை முந்தியாடல் வேண்டும்.
ஓர் ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் 'சரிபாண்டி' ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டியாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம்.

பி.கு.
மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்
 எழுதிய தமிழக விளையாட்டு குறிப்பிலிருந்து வழங்கபட்டது
 

No comments:

Post a Comment